ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Discuss here on ரமணர் ஆன்மிக சிந்தனைகள் within the Spirituality forums, part of the Home forum; முடிந்த உதவியைச் செய் * மகிழ்ச்சி மனிதனுக்குள்ளேயே இருப்பது தானே தவிர, வெளியிலுள்ள பொருள்களினால் ஏற்படுவதில்லை. உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்வது மகிழ்ச்சி. * வாக்காலும், மனத்தாலும், ...
-
30th Dec 2011, 03:59 PM #1
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
முடிந்த உதவியைச் செய்
* மகிழ்ச்சி மனிதனுக்குள்ளேயே இருப்பது தானே தவிர, வெளியிலுள்ள பொருள்களினால் ஏற்படுவதில்லை. உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்வது மகிழ்ச்சி.
* வாக்காலும், மனத்தாலும், உடலாலும் சமுதாயத்திற்கு முடிந்த உதவியை செய்வதுடன், நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் உயர்த்த வேண்டும்.
* உணவுக் கட்டுப்பாடு, குறைந்த அளவிலான சத்துணவு போன்றவை மனதை தூய்மையாக வைக்க உதவும் நல்ல வழி.
* தவறான செயலை செய்துவிட்டு, அறியாமையால் அதை மறைக்கக்கூடாது. குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழப் பழக வேண்டும்.
* காந்த ஊசி எப்போதும் வடக்கு திசை நோக்கி இருப்பது போல, ஈசனைப் போற்றுபவர்கள் அவரது நினைவாகவே இருப்பர். ஆசையால் வழிதவறி நடப்பதில்லை."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
30th Dec 2011, 04:00 PM #2
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
வலது பக்கத்தில் ஒரு இதயம்
* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.
* சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.
* இதயத்தில் வசிப்பவர் மனம், பகலில் சந்திர ஒளி போன்று, இதய உணர்வில் கலந்து விளங்குகிறது. 'பிரக்ஞானம்' என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருள் 'மனம்' என்றாலும், அது இதயத்தையே குறிக்கிறது என அறிஞர் உணர்வர். பரம்பொருள் இதயமே.
* அறிபவருக்கும் அறி பொருளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மனத்தளவிலே தான் உண்டு. மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது துக்கம், பயம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தனது மூலமாகிய இதயத்திற்கு செல்கிறது. அத்தகைய கலப்பை நாம் உணர்வதில்லை. இருப்பினும் உணர்வோடு இதயத்தில் நுழையும்போது அது 'சமாதி' என்று அழைக்கப்பெறும்.
* இதயக் குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது. 'நான்-நான்' என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது. ஆத்ம விசாரத்தின் மூலமோ அல்லது கலப்பினாலோ, அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே வேரூன்றி இரு.
* ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நான் பேசுகின்ற இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது. இது எனது அனுபவம். இதற்கு வேறு சான்று தேவையில்லை.
-
30th Dec 2011, 04:02 PM #3
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
சாந்தமுள்ளவனே உலகின் அதிகாரி
ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.
* 'சாந்தம்' என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.
* சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.
-
30th Dec 2011, 04:03 PM #4
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்
சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.
-
30th Dec 2011, 04:04 PM #5
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
பகவானுக்கு ருசி முக்கியமல்ல
'நான்' என்கிற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.
* எவ்வளவுக்கெவ்வளவு பணிந்து நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு.
* பகவானுக்கு ருசி முக்கியமல்ல; அடியார்களது பக்திதான் முக்கியம்.
* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.
* பரம்பொருளைத் தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் ஆகும்.
* பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா. அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் - இந்த நிலைகளைக் கடந்து விடுகிறான். இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.
* ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனுக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.
* நூல்களில் மூன்றுவித தீட்சைகள் கூறப்பட்டுள்ளன. 'ஹஸ்த தீட்சை' என்பது சீடனின் சிரசைத்தொட்டு அருள் புரிதல், '*சட்ச, தீட்சை' என்பது அருட்பார்வையால் தீட்சை அளிப்பது. 'மானசீக தீட்சை' என்பது மனதினால் அருள் புரிதல். இவற்றில் மானசீக தீட்சையே அனைத்திலும் சிறந்தது.
-
30th Dec 2011, 04:06 PM #6
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
அகங்காரம் இருக்கும் வரை முக்தி இல்லை
பாலும் நீரும் கலந்தது போன்றது உலகம். நீங்கள் ஓர் அன்னம் போன்று இருந்து, நீரைத் தவிர்த்து பாலைப் பருகுங்கள்.
ஏகாந்தத்திலே (தனிமை) இருந்து நீங்கள் தியானம் புரியும்போது உங்கள் குடும்பத்தவரிடமிருந்து உங்களை முற்றிலும் பிரித்துக் கொண்டு தனித்திருங்கள்.
இல்லறத்தாருக்கு ஜீவர்களிடத்து அன்பு, பக்தர்களுக்குச் சேவை; கடவுளின் புனித நாம உச்சாடனம் ஆகியவை கடமைகளாகும்.
பணம் நமக்குப் பெற்றுத் தருவதெல்லாம் சோறும், கறியுமேயாகும். பணத்தையே உங்களுடைய உயிரும் உடலுமெனவோ, உங்களது ஒரே குறியும் நோக்கமும் எனவோ கருதாதீர்கள்.
அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடாது; பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்; நீங்காது.
இல்லறத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்பி இருங்கள்; பின்னர் நீங்களாக எதையுமே செய்ய வேண்டியிராது. அன்னை காளி உங்கள் பொருட்டு யாவற்றையும் தாமே செய்வாள்.
சம்சாரமாகிய பெருங்கடலில் ஆறு முதலைகள் உள்ளன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவையே அந்த முதலைகளாம்.
பெண்ணாசையை ஒழித்தவன் உலகத்தையே துறந்தவன் ஆவான். அவனுக்கு இறைவன் வெகு அருகில் இருக்கிறார்.
மாயை என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியவர்களிடம் ஒருவனுக்கு உண்டாகும் பாசமாகும். எல்லா உயிர்களிடமும் சமமாகப் பரவும் அன்புக்கு தயை என்று பெயர்.
-
30th Dec 2011, 04:08 PM #7
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
சாந்தமுள்ளவனே தைரியசாலி
சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்?
குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது;
* ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம்.
சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.
-
30th Dec 2011, 04:09 PM #8
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
தாழ்ந்து நடப்பதால் கேடில்லை
நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும்.
உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது.
எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.
'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும்.
என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.
எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும்.
முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.
எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.
-
30th Dec 2011, 04:11 PM #9
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
எல்லாம் கடவுள் செயல்
அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல்.
எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை.
எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும்.
எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான்.
கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்.
-
30th Dec 2011, 04:13 PM #10
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
கடவுளிடம் பாரபட்சம் இல்லை
இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும்
இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரிந்த போதிலும் நாம் இன்பத் தையே நாடுகிறோம். இதற்கு முடிவு தான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி, ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தை பற்றி நினைக்கிறான்.
துறவி கடவுளைப் பற்றி நினைக்கிறான். ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
Similar Threads
-
தாயுமானவர் ஆன்மிக சிந்தனைகள்
By Parasakthi in forum SaintsReplies: 7Last Post: 15th Dec 2011, 05:17 PM -
குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்
By sumathisrini in forum Health and Kids FoodReplies: 0Last Post: 27th Oct 2011, 07:59 PM -
உரத்த சிந்தனை: ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 22nd Aug 2011, 01:01 AM -
கணினிகளில் சக்தியை (எனர்ஜி) சேமிக்கும் வழ
By silentsounds in forum ComputerReplies: 1Last Post: 19th Apr 2011, 12:06 AM -
நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் : ஆர்.நடரĬ
By silentsounds in forum News & PoliticsReplies: 0Last Post: 24th Mar 2011, 10:23 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks