கைசிக ஏகாதசி – Kaisika Ekadasi

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

இது, வைகுண்ட ஏகாதசி போல, வைணவர்களுக்கு, மிக முக்கியமான ஏகாதசி ஆகும்.

இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

kaisika ekadasi

ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.

ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.

கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டியிடம், நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னைப்பற்றிப் பாடி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கதை என்னவென்று பார்ப்போம்.

நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன் ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான்.

.கைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 365 “பச்சை” எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.

குருவாயூரிலும், இந்த ஏகாதசி, மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

இந்த வருடம், கைசிக ஏகாதசி, 02-12-2014 அன்று வருகிறது .

இந்த நாளில், முழுப் பட்டினி விரதமிருந்து, மறுநாள், துவாதசி அன்று காலையில், நெல்லிக்காய்,அகத்திக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்து, உண்டால் மிகுந்த பலன் கிட்டும்.